ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது



கண்ணாடியொன்றை
கொண்டு வந்தாள் அவள்
நாமிருவரும் இதன்முன்
தலைவாரிக் கொள்ளலாமென்றாள்
கண்ணாடியில் அவள் பிம்பம்
படியும் நேரம் அதிகமாகிப்போனது


கண்ணாடியும் அவளும்
கதை பறிமாறிக்கொண்டனர்
கண்ணாடியில் கவிதைகள் கிறுக்கினாள்
கண்ணாடி அதை வாங்கி
அவள் பிம்பத்தில் பதித்தது
கண்ணாடியுடன் ரகசியங்களும்
என்னுடன் தூரங்களும்...


தூரப் படுக்கையறையில்
துயில் கலைந்து விழித்தபொழுது
கண்ணாடியும் அவளும்
பேசிச் சிரிக்கும் சப்தம்
பேய்மழையென பெய்தது


என்னை விட அவளுக்கு
கண்ணாடி முக்கியமாகிப் போனது
நான் தலைவாரச் செல்லும்போது
கவிதைப் பேனாக்களை
மறைத்துக்கொண்டு
சீப்பைத் தேடித் துழாவுகிறாள்...


என்ன செய்கிறாய் என்றேன்...
”தலைவார வந்தேனென்றாள்”.




நண்பர்கள்
'ஃபோன வையுடா' என்றார்கள்
நீயோ
'அப்புறம்' என்றாய்!

அம்மா
'ஊருக்கு வா' என்றாள்
நீயோ
'லீவ்ல எங்க போகலாம்' என்றாய்!

அப்பா
'பேசி ஒரு வாரமாச்சுல்ல' என்றார்
நீயோ
'மதியத்துல இருந்து ஏன் பேசவேயில்ல' என்றாய்!

ஊர்
'பைத்தியக்காரன்' என்றது
நீயோ
'செல்லக்குட்டி' என்கிறாய்!




ஆழி வெப்பத்தில்
ஆவியாதலும்
மழையாதலுமாக
மாறிக்கொண்டே இருக்கிறது
வீடற்ற துளிகள்

கிழக்கில் தோண்டி
மேற்கில் புதைத்த
வண்ணமிருக்கிறது
பூமி தனது ஒளியை

உருவமற்ற நதியில்
வீழ்ந்து கிடக்கும்
சூரிய சந்திரர்களும்
கலைந்தபடியே இருக்கிறார்கள்
குறிப்புகளற்ற வாழ்க்கையில்
கைக்கடங்காத பெருவுருளையைப்
பற்றிக் கொள்ளும் முயற்சியில்
வழுக்கி விழுந்தபடியே
இருக்கிறது நிலையைத்
தேடும் ஜீவ கிரணங்கள்.




என்னுடைய எண்ணங்கள் சில...

இந்தியாவின் புத்தகமான constitution of india ல் பகுதி 1 ன் முதல் வரியிலேயே "India, that is Bharat, shall be a Union of States." அப்படின்னு இருக்கு. பல பிரிவுகளான மாநிலங்களை ஒன்று கூட்டியதே ஒட்டு மொத்த இந்தியா. இதில் ஜம்மு, மற்றும் காஷ்மீருக்கு கொஞ்சமே வேறுபட்ட சட்டம் உண்டு.

இந்தி எந்த ஒரு இடத்திலும் அதிகாரப் பூர்வமான தேசிய மொழி என குறிப்பிடப் படவில்லை. இந்தியாவில் 2001 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்த விபரத்தின் பேரில் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், உருது, கன்னடம், ஒரியா போன்ற மொழிகள் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவது தெரியவந்தது (இது இறங்குவரிசையில் அடுக்கப்பட்டுருக்கிறது).

பொதுவில் நான் இந்தி கட்டாயமாக்கப் படுதலையோ அல்லது இந்தி எதிர்ப்பையோ இரண்டையுமே ஆதரிக்கவில்லை. ஒருவருக்கு மற்றவரின் மொழி பல சமயங்களில் தெரிந்திருக்க வேண்டியுள்ளது. முக்கியமாக வியாபார நிமித்தம். ஆக அதைத் தெரிந்து கொள்வதும் தெரிந்து கொள்ளாததும் அவரவர் சுய விருப்பம். என்னுடைய சமுதாயத்துடன் பேசிப் பழக எனக்கென ஒரு மொழி இருக்கும் பட்சத்தில் நான் மற்ற சமுதாயத்துடன் பேசிப் பழக வேண்டிய அவசியமில்லாத தருணம் எனக்கு அவரது மொழி அவசியமில்லாததாகிறது. ஆக எனக்கு இந்தி அவசியமில்லை. அதே சமயத்தில் நான் வட இந்தியாவிற்கு குடிபோக நேரிட்டால் நிச்சயம் இந்தி கற்றுக் கொள்வேன். கொரியாவில் இருக்கும்பொழுது கொரிய மொழியின் முக்கிய சொற்களையும், இப்பொழுது ஜப்பானில் இருக்கும் பட்சத்தில் ஜப்பானிய மொழியையும் கற்றுக் கொள்ள முயல்கிறேன். ஆக இது முழுக்க முழுக்க தனிமனித விருப்பம் சார்ந்தது.

விருப்பப்பட்டவர் படிப்பதில் தவறே இல்லை. விருப்பப்படாதவரை படிக்கச் சொல்வது சிறிதும் ஞாயமில்லை. மிஞ்சிப் போனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் மொழியை கட்டாயப் பாடமாக படித்தல் வேண்டும் என்ற பொதுநோக்கு சிந்தனையை கொண்டு வரட்டும். ஏனெனில் இந்தியாவின் எந்த மொழியும் அழிந்து போவதில் எனக்கு சம்மதமில்லை. பிற மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவர் அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வேறு மாநிலத்தில் இருந்தவரது குழந்தைகளுக்கு தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம், ஆனால் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவோ அல்லது ஒருவர் தமிழ்நாட்டிற்கு குடியேறி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலோ அவர்கள் தமிழைக் கட்டாயம் பயின்றே ஆக வேண்டுமென்பதில் தவறொன்றும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியையும் போற்றிக் காக்க வேண்டியது அவரவர் கடமை. இது போல தேசியத்திற்கு ஒத்துப்போகும் சட்ட திருத்தங்களை கொண்டு வரலாமேயன்றி ஒத்துவராத திணிப்பு தவறானதாகப் படுகிறது.

422 மில்லியன் இந்தியர்கள் இந்தி பேசுவதாலும், வெறும் 61 மில்லியன் இந்தியர்கள் தமிழ் பேசுவதாலும் இந்தியை தமிழ்நாட்டில் கட்டாய மொழியாகக் வேண்டுமென்பது அறிவின்மை. இந்தியாவில் 85 விழுக்காடு இந்துக்கள் இருப்பதால் இந்து மதத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய மதமாக்குவதற்கு ஒப்பாகும்!

இந்திய சமுதாயமென்பது ஒட்டுமொத்தமாக ஒரே பழக்கவழக்கத்தைக் கொண்ட சமுதாயமன்று. இங்கே மதங்களும், மொழிகளும் பல. சமுதாய வழக்கங்கள் மதங்களுக்கொன்றுமாகவும், மொழிக்கொன்றுமாகவும் இருக்கிறது. ஆக இந்தியர்கள் அனைவரும் இந்தி பேசினால்தான் இந்தியாவின் ஒற்றுமை போற்றப்படுமென்பது தவறு. அதே சமயம் இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப் படவேண்டிய சொத்து. அதை யாரும் சீரழிக்க முன்வருதல் கூடாது. சமஸ்கிருதம், ஆங்கிலம் இவற்றின் ஆதிக்கத்தில் எத்தனை அழகான தமிழ் சொற்கள் காணாமல் போயிருக்கின்றன, இத்தனைக்கும் இங்கே யாரும் அதை கட்டாயமாக்கவில்லை. இப்பொழுதே இப்படியென்றால் கட்டாயமாக்கப் பட்டால், தமிழ்மொழி பேசுபவரின் எண்ணிக்கை குறைவதில் ஆச்சரியமே இல்லை.
இப்பொழுதே ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் மற்றுபிற மொழிகள் இரண்டாம் மொழியாகவுமே இருக்கிறது. சகல விஞ்ஞானமும் அறிவியலும் கணக்கும் ஆங்கிலத்தில் இருப்பதால் அதை கட்டாய மொழியாக்கியது தவறாகப் படவில்லை. ஆயினும் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டாம் மொழியாகத்தான் வைத்திருத்தல் வேண்டும், ஏனெனில் இந்தியாவின் எந்த மாநிலமும் மொழி இல்லாத பிச்சைக்காரர்களாக இல்லை. அவரவர் மாநிலத்தில் அவரவர் மொழி தொன்மை வாய்ந்ததாகவும் அதனோடு பழக்கவழக்கங்களும் ஊறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொழி அழியும் அதே நேரத்தில் மக்களின் பழக்கங்களும் அழியும் என்பதில் ஐயமே இல்லை.

தமிழ்நாட்டில் இந்தி படிக்கவே தடையென்றால் அது தவறான செயல். ஏனெனில் உலகின் எந்த ஒரு மொழியையும் படிக்கும் உரிமை ஒரு மனிதனுக்கு வழங்கப்பட வேண்டும். அதே சமயம் அவனது தாய், தந்தை பிறந்த மாநிலத்தின் மொழியை ஒரு குழந்தை கற்பது அத்தியாவசியம். இல்லையேல் அந்த மொழியே அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் எங்குமே இந்தி படிக்கத் தடையிருப்பதாக தெரியவில்லை. அதே சமயம் தமிழ்நாட்டிலும் சரி வேறு எந்த மாநிலத்திலும் சரி அவரவர் மொழிகள் கட்டாயப் பாடமாக்கப்படாமல் இருப்பது எனக்கு வருத்தமே!




சொற்களுக்கு
முன்பும் பின்பும்
மௌனமே இருக்கிறது

உலகின் எந்த மொழிக்கும்
பொதுவானவைகள் அவைகள்

மௌனம்
மீட்டமுடியாத இசை
அவை துளையிடப்படாத
புல்லாங்குழலுக்கே புரிந்தவை

மௌனம் ஞானத்தின் மொழி
அவற்றில் எல்லாவற்றிற்குமான
பதில்களும் இருக்கிறது

மௌனம் புனிதம் - அது
புதிய சொற்களின் கருவறை
பழைய சொற்களின் ஜீவசமாதி

மௌனம் அகிம்சை
அவைகள் சொற்காயங்களை
ஏற்படுத்துவதில்லை

மௌனம் யாரையும் உடைப்பதில்லை
உணராதவர்கள் அதிலிருந்து
தவறான சொற்களைப்
புரிந்து உடைகிறார்கள்

மௌனம் நிரந்தரம்
இல்லைகள் ஆமென்றாவது
அங்கேதான்

மௌனம் கடவுளின் மொழி
அதனால்தான் பூக்கள்
அதைப் பேசுகின்றன


வரும் வழியில்
காலத்தீ சுட்ட காயத்தை
அவனிடமிருந்து மறைக்க எண்ணினாள்
காயங்களைக் கண்டு
அவன் அழக்கூடுமென

அவனை வந்தடைந்ததும்
கைகுலுக்குவதற்கு
கரத்தை நீட்டியபோது
காயங்களையுணராது
அவனை
காக்க வைத்ததிற்கு கோபப்பட்டு
சுட்டெரித்தான் சில விரல்களை

வெந்த பாகங்களோடு
வீடுவந்து அடைந்தாள்
தனிமையில் காயங்களுக்கு
கண்ணீரை மருந்தாயிட!



நாயொன்றை சொந்தமாக்கினான்,
அழகுப் பதுமையது
அவன் மடிச் சூட்டிலேயே
அதைத் தாங்கிக்கொண்டான்

குளித்தல்,
நடத்தல்,
துயில்தல்,
உண்ணுதல்,
விளையாடுதல்
இவையெல்லாம்
அவன் எண்ணப்படியே!

'இந்தப் பண்டிகைக்கு
ஜீன்ஸ் எடுத்துக் கொடுங்கப்பா'

'அடி... நாயே...
பொட்டப்புள்ளையா லட்சணமா இரு'

அதிகார சத்தத்தில் பயந்துபோன
அடிமை நாய்
எஜமானன் காலடியிலேயே
முகம் புதைத்துக்கொண்டது!



பதிவுலகம், ஒரு சரியான மாற்றமாக நான் கருதிய இடம். 12ம் வகுப்பிற்கு பிறகு பலர் இங்கே தமிழில் எழுதுவதே இல்லை. கடிதமெழுதும் முறையும் ஈ-மெயில் தளத்திற்கு மாறிய பின்னர் தமிழ் அதிலிருந்தும் விலகிவிட்டது. என் தோழர்கள் சிலர் தன்னுடைய கையெழுத்தின் அழகே போய்விட்டது, முக்கியமாக தமிழே மறந்துவிட்டது எனக் கூறுவார்கள். உண்மைதான், கணினி தொழில் நுட்பத்திலும், இதர பல வேலைகளிலும் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் செலவழிக்கும் யாரும் தனது கையெழுத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதி பார்ப்பதே இல்லை. இதை நிவர்த்தி செய்யும் ஒரு இடமாக பதிவுலகமும், இணையக் குழுமங்களும் உருவெடுத்தது மிக நல்ல மாற்றம்.

நான் சில நேரம் வியந்ததுண்டு, கவிதைகளை நேசித்து பின்னூட்டமிடும் பலர் உடனடியாக கவிதை எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். முதலிலெல்லாம் வாசகர்களாகவே பலர் காலம் முழுதும் இருந்ததுண்டு. எழுதுபவருக்கு இணையாக வாசகருக்கும் ஆழ்ந்த சிந்தனை இருக்கும், கவிதை, சிறுகதை பற்றிய தேர்ந்த ஞானம் இருக்கும். இன்றோ புதுக்கவிதை என்ற பரிமானத்தாலும், பதிவுலகத்தாலும் பலரும் கவிதை, சிறுகதை எழுதி வருகிறார்கள். இது ஒரு பாராட்டத்தக்க மாற்றம்தான். அன்றாட தொழிலில் என்னதான் ஈடுபாடோடு இருந்தாலும் சலிப்பு தட்டும் நேரங்களில் மனம் வேறு ஒரு பொருளை நாடும்போது இந்த பதிவுலகம் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றது. அப்படியே தமிழும் தன் ஆயுளை நீட்டிக் கொண்டிருப்பதில் ஏக மகிழ்ச்சி.

எதிர்விணை என்ற ஒரு கருவியைக் கொண்டு ஒரு சில பதிவுலகர்கள் அடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் பதிவுலக விருது என்ற பெயரில் யாரேனும் ஒருவர் ஒரு விருதை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்க்கு தட்டிவிடும் பொழுது அது பன்றிக் காய்ச்சல் போல :-) பதிவுலகம் பூராவும் பரவி விடுகிறது. ஆயினும் இது ஒரு நட்புக் காய்ச்சல்! சக பதிவர்களிடம் மனமுவந்து நட்பு பாராட்டும் விதமாக இந்த விருதுகள் தரப்படுவது நல்ல முயற்சி. ஆனால் சமீபத்தில் பதிவுலகத்தில் நிலவும் மற்றொரு கருத்து விருதுகள் சலிப்புத் தட்டுகின்றன என்பதாக இருக்கிறது. எப்பொழுதுமே ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தோன்றிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும் இதுவும் சிந்திக்க வேண்டிய கருத்தாகவே இருக்கிறது. ஒரு விருதின் அலை தொடங்கி கரை வந்து முடியும் நேரத்திற்குள்ளாகவே அடுத்த விருதின் அலை தொடங்கிவிடுகிறது. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும், ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் போதிய இடைவெளி விடச்சொல்லும் அரசாங்கத்தின் அறிவுரை போல ஒரு விருதின் அலைக்கும் மற்றொரு விருதின் அலைக்கும் போதிய இடைவெளி விட்டால் தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஸான் விருந்தைப் போல திகட்டாமல் இருக்கும். இல்லையேல் அன்றாட பிரியாணியும் அலுத்துப் போகும் என்ற புதுமொழி?!க்கு ஏற்றார் போல இதுவும் அலுத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.

எனக்கு இந்த Interesting Blog Award (வேற வழியில்லங்க, இப்படித்தான் ஆங்கிலத்துல இருந்துச்சு, ஒரு வேளை பல மொழி பதிவர்களுக்கும் இடையில பொதுவான நட்பு பாராட்ட ஆங்கிலத்துல தட்டச்சிருப்பாங்க போல...?!) முதன் முதலில் நட்புடன் ஜமாலிடமிருந்து வந்தது. எனது காலக்கவிஞன் என்ற கவிதையின் பின்னூட்டமாக விருதோடு அடியெடுத்து வைத்தார். இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் எனது தோழி சகாராதென்றலிடம் இருந்தும் மறுமுறை வந்திருக்கிறது. எனக்கு தெரிந்த வலைப்பதிவர்கள் பலரும் இந்த விருதை பெற்றுவிட்டதாலும், மீதமுள்ளோர் விருதை வாங்க விருப்பமில்லாமல் இருப்பதாலும், இந்த விருதை மூவருக்கு மட்டும் கொடுக்கிறேன்.

உத்ரா - என் கல்லூரி முதல் வருடத்தில் இவனது கவிதைகள் நிறைந்த டைரியை காண நேரிட்டபிறகுதான், எனக்குள்ளே ஒரு கவிதை உருவானது. நான் எழுத ஆரம்பித்த பிறகு ஒன்றிரண்டு முறை அவன் கூறிய பின்னூட்டத்திலிருந்து எனது எழுத்துக்கள் மேலும் மெருகேறியது. அவனுக்கு பின்னர் எனது பயணத்தை ஆரம்பித்திருந்தாலும், அவனுக்கு முன்னர் பதிவுலகம் வந்துவிட்டேன். நான் நேசித்து வாசிக்கும் கவிஞர்களில் இவனுக்கு எப்பொழுதுமே முதலிடம்!

இரசிகை - என் அண்ணி. பதிவுலகத்தில் கால் வைப்பதற்கு முன் பலநூறு தடவை சிந்தித்து கால் பதித்தவர்கள். எளிமையான கவிதை இவரது இலக்கணம். இரசிகையின் பார்வை எப்பொழுது வித்தியாசமும் சுவாரசியமும் நிறைந்தவை.

சுரேஷ் - இவன் ஒரு சிறந்த சிந்தனையாளன். வித்தியாசம் என்பது இவனது மந்திரம். எதிலும் வித்தியாசப்படுவது அல்லது அதை வித்தியாசப்படுத்துவது இவனது தந்திரம். எழுத்துலகிலும் இவனது ஒரு சில படைப்புகள் அந்த வித்தியாசத்தை காண்பித்திருக்கிறது. "குறுஞ்செய்தி வாயிலாக ஒரு கதை" என்ற இவனது படைப்பு எனக்கு மிகப் பிடித்தம்.


இது யுகமாயினி பத்திரிகையில் வெளியானது. படத்தின் மீது சொடுக்கினால் பெரியதாக காணலாம்.








மாதமொரு முறை
நிலாமுற்றச் சோறு,
அம்மாவின் பழக்கமது!

பருவத்தில் சொன்னேன்...
பாட்டி இல்லையம்மா
அது நிலவின்
பள்ள மேடுகளென...
என் கன்னம் கிள்ளி
கொஞ்சினாய்

மீண்டுமொரு நிலாச்சோறு
மீதமாய் நீ மட்டுமில்லை
என் பிள்ளையிடம்
சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்
"அதோ பார், நிலவில் உன் பாட்டி..."



பெரும் வெளியில்
பேய்க்காற்றின்
கரங்களால்
எறியப்பட்ட
மேகங்கள்
ஒன்றுடன் ஒன்று
புணர்ந்து கொண்டிருந்தது

வெட்கங்கெட்டுப் போய்
சத்தமிட்டவாறே
அவை சேர்ந்து
திரிகையில்
காமக் குரோதம் கொண்ட
ஒளிக்கீற்று ஒன்று
உலகிலோர் உயிர்
உறிஞ்சிப் போனது

காமப்பசி
அடங்கிப்போனதற்கு
அறிகுறியென
சுக்கிலமாய் வழிந்தது
மழைத் துளிகள்

அதில் எந்தத்
துளியும் கழுவிடவில்லை
அப்பிஞ்சை சுமந்த
காம்பின் கண்ணீரை.


பி.கு: மே 20, 2009 அன்று கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு 9ம்
வகுப்பு மாணவன் உயிரை பலி வாங்கியது மின்னல். அன்று எழுதியது.



பல புள்ளி விபரங்கள் காட்டும் எண்ணிக்கை இந்தியாவில் 81.3% இந்துக்களும், 12% முஸ்லீம்களும், மீதம் ஏனையோர்களும் இருப்பதாக கூறுகிறது. பல இணைய குழுமங்கள் முதல் அன்றாட பத்திரிகை வரை பலரால் விமர்சிக்கப்பட்ட மதம் இந்து மதமாகத்தான் இருக்கக் கூடும். காரணமும் இருக்கத்தான் செய்கிறது. இப்பேர்பட்ட விமர்சனங்களின் அச்சாணியாக இருப்பது சாதிய முறை என்ற ஒன்றே. சாதியின் பெயரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டவர்கள் பலர் மதம் மாறினர். இதெல்லாம் ஒரு புறம் இருக்க, என்னுடைய பார்வையில் இந்து மதம் எனப்படுவது யாது அது எப்படி இருக்கிறது என்பதை பதிய விரும்புகிறேன்.

இந்து என்பது முதற்கண் ஒரு மதம் அல்ல, அது ஒரு நெறிமுறை, தத்துவம், கோட்பாடு. மற்ற பெரிய இரு மதங்களில் மதத்திற்கொரு புத்தகமென்று வைத்துக்கொண்டு அதை அந்த மதக்காரர்கள் தவறாமல் வாசித்து விடுகிறார்கள். ஆனால் இந்துக்களோ பலர் வேதங்களை வாசிப்பதில்லை. சில மதத்திலிருக்கும்; தன்னை மனிதாபிமானிகள் எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் இந்து சமுதாயத்தைக் கேலி செய்வதுண்டு. இவர்களுக்கு தெரியாதா அல்லது தெரிய மறுக்கிறார்களா எனத் தெரியவில்லை. இருப்பினும் சிலவற்றை கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தியா என்னும் நாட்டில் மொழிகள் ஆங்கிலம், ஹீப்ரு, உருது, அரபு போன்ற ஒற்றை மொழி மட்டுமே இல்லாமல் இருந்ததே இதற்குக் காரணம். 2000 வருடங்களுக்கும் முன்னர் எழுதப்பட்ட, அதுவும் தமிழில் எழுதப்பட்ட திருக்குறளே இப்பொழுது பலருக்கும் புரிவதில்லை. காரணம் என்ன? காலம் தொட்டு மொழியாளுமையும், பயன்படுத்தும் சொற்களும் மாறி வருகிறது. இதனால் காலம்தொட்டு எழுதப்பட்ட ஏனைய பதிவுகள் இன்றைய தேதிக்கு அர்த்தம் கொள்ளக் கடினமானதாக இருக்கிறது. அதே போல வேதங்கள் இறை அருள் பெற்ற வேத ரிஷிகளால் அவர்களால் பேசப்பட்ட மொழியில் அந்தக் காலத்தில் எழுதப்பட்டது. இருப்பினும் வேதத்தை உணர்வது என்பது அத்தனை எளிதல்ல, அதற்கு ஒரு ஞானம் தேவைப்படுகிறது. இதை பாமரனும் உணர்ந்துகொள்ளும் விதம் சொல்லுவதற்கே ஏனைய ஏடுகள் உள்ளன. கீதை, மஹாபாரதம், இராமாயணம் போன்ற பதிவுகளில் இந்து மதக் கோட்பாட்டை தெள்ளிய முறையில் எழுதியிருக்கிறார்கள். அது என்ன வேதம்? பாமரர்களுக்குப் புரியாமல் என்றும் பலர் கேட்கக் கூடும். இந்து என்ற நெறியில் இந்து என்ற நெறியைக் காக்கும் சங்கம் என்றோ, இந்த மதத்திற்கு இவர்கள்தான் குருமார்கள் என்றோ என்றும் நியமிக்கப் பட்டதில்லை, ஏனெனில் இந்து என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை, அதை இந்தியத் திருநாட்டில் இருந்த அனைவரும் பயன்படுத்தி வாழ்ந்தனர். இந்து என்ற அமைப்பில் சுதந்திரம் என்பது வெகுவாகப் பாராட்டப் பட்டது. இந்து என்ற ஒன்றை ஒரு அலுவலகம் போலவோ, அரசு போலவோ மாற்றும் எண்ணம் எங்கேயும் தோன்றவில்லை, அதாவது இந்து எனப்படுபவன் யாரெனின், அவன் நான்கு வேதங்களையும் கற்க வேண்டும் என்றோ அல்லது இந்தக் கோவிலுக்கு வாராவாரம் அல்லது தினமும் செல்லுதல் வேண்டுமென்றோ யாரும் விதிமுறை இட்டதில்லை. இந்து மனிதனை தன் சொந்த மூளையின் திறனிலேயே இயங்கவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்து சமுதாயத்தில் பிறந்த ஒருவன் வேதங்களைக் கற்க ஆங்காங்கே பாடசாலைகள் அன்று இருந்தன, அதில் கற்று ஞானம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு உபதேசிப்பதுண்டு. ஆயினும் ஆடு மாடு மேய்ப்பவர்களும், கழனியில் தினக் கூலி பார்ப்பவர்களுக்கும் அத்தகைய வேத நூல்கள் தேவைப்பட்டதில்லை, அதற்கு பதில் பூஜை புனஸ்காரம் என்று தெருவிற்கு ஒரு கோவில் வைத்து அதன் வழியே வாழ்க்கைக்குத் தேவையான நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொண்டதே போதுமானதாக இருக்கிறது. இப்பொழுது இருக்கும் பல மதத்திற்கும் வெகு முந்தியது இந்து என்பதாலும் பல ஆயிரம் வருடங்களாக மாபெரும் நிலப் பரப்பில் அது பரவிக் கிடப்பதினாலும், ஒற்றைக் குடையின் கீழ் அதை யாரும் நிலைநிறுத்தவில்லை, மாறாக இருப்பது அப்படியே என்ற தத்துவத்தின் பேரில் அது வளர்ந்திருக்கிறது.

ஆயினும் மனிதர்களின் மனம் நாமறியாததல்ல, பல அரசர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தனக்கான மக்களை தன் நிழலில் வைத்துக் கொள்ளவும் ஒவ்வொரு சமயத்தை வளர்க்க ஆரம்பித்தார்கள். ஆயினும் உலகின் எந்த நாட்டிலும் இல்லாதவாறு இறையான்மையோடும் அன்போடும் வாழ்ந்த பல அரசர்கள் தோன்றிய புண்ணிய பூமி இந்த இந்து பூமி என்பதையும் மறந்துவிடக் கூடாது. காலப் போக்கில் உலகின் மற்ற மூலைகளில் அப்பொழுதுதான் மதம் முளைவிடத் தொடங்கியிருந்த காலத்தில் இந்து மதம் பழுத்த மரமாகிவிட்டிருந்தது, அதனால் கல்லடிகளும் படத் தொடங்கியிருந்தது. சமயம், சாதி என்னும் முறைகள் ஆரம்ப இந்து காலத்தில் வெறி இல்லாமல் மட்டுமே இயங்கியிருக்கிறது. ஒரு தொழில் மேம்பட செய்யப்பட வேண்டுமாயின், அந்தத் தொழில் தலைமுறை தலைமுறையாக வளர்க்கப் பட வேண்டும். சிலை செய்வது எல்லோராலும் முடியாத காரியம், அதற்கு தேர்ந்த ஞானம் தேவைப்படுகிறது, அதே போல் ஆடு மாடு மேய்த்தல். இது போல சமுதாயத்திற்கு தேவையான பல தொழில்களை, குறிப்பிட்டவர்கள் என்று அன்றி சிலர் செய்ய ஆரம்பித்து பின்னர் அதுவே பரம்பரை பரம்பரையாக தொடரப் பட்டிருக்கிறது. அதுவே பின்னர் அவர்களுக்கு அடையாளமாகிப் போக, அதே சமயங்கள், சடங்குகள், அந்தந்த சமயத்தின் குருமார்கள் என வலுப்பெற ஆரம்பித்த சமயம் சாதிய முறைகளுக்கு நடுவே வெறி புகுத்தப் பட்டிருக்கிறது.

ஒரு சிறிய நகரத்தில் ஒருவரால் தோற்றுவிக்கப் பட்ட மதம் போல் இந்து முறை வளராமல், அது பரந்த இந்து பூமியில் பல்வேறு மக்களாலாலும் வளர்க்கப் பட்டதால் அதற்கென்று அடையாளப் புத்தகம், இன்ன இன்னதைப் பின்பற்றவில்லையென்றால் நீ கேள்வி கேட்கப் படுவாய் தண்டிக்கப் படுவாய் என்று ஒரு மத குருமார்களின் சங்கமும் அன்றில்லாமல் போனது. இதனால் மட்டுமே சாதிய முறைகள் புகுந்த பொழுது அதைத் தடுக்கவியலாமல் போனது. மனிதர்கள் காட்டுவிலங்கிலிருந்து மனிதனாய் பிரிந்து நன்னெறியோடு வாழ ஆரம்பித்த காலத்தில் தனக்கான வழிமுறைகளை பண்பாடு என்னும் முறையில் வளர்த்த ஆதிகாலத்தில் இந்து என்ற ஒரு சமுதாயம் உருவாகியிருக்கிறது. ஆனால் இன்றைய அளவில் சிவன், விஷ்ணு, பிரம்மா, ஆதிபராசக்தி போன்ற உருவங்களை மட்டுமே வைத்து இந்துக்களில் பலரும், மற்ற மதத்தவர்களும் இந்து என்ற சமுதாயத்தை நோக்குகிறார்கள். இது அடிப்படைத் தவறாகும். நான் இந்துவாக இருந்து கொண்டே மேற்சொன்ன கடவுளர்களை வழிபாடாமலும் இருத்தல் சாத்தியம். ஆனால் இந்த சுதந்திரம் மற்ற மதத்தில் இருந்ததில்லை, காரணம் உங்களுக்கே புரிந்திருக்கும், இந்து என்பது புத்தர், நபிகள், இயேசு போன்றோரால் நிறுவப்படாத ஒன்று, அது ஒரு விதை விருட்சமானது போல மெல்ல மெல்ல வளர்ந்தது. ஏடுகளும் தாள்களும் இல்லாத காலத்திலிருந்தே வளர்ந்து வருவது. பல ஆதார ஏடுகள் காலப் போக்கில் அழிந்து போனதும் கூட. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த சமுதாயம் ஒவ்வொரு கதைகளை புனைந்துவிட்டு புராணத்தோடு அதைச் செருகியதும் நடந்திருக்கிறது என்பதும் கண்கூடாக தெரிகிறது. பல புராணக் கதைகளில் சாமானிய மனிதனின் பார்வையில் படும் குடும்ப முறைகளும், அங்கே ஒரு பாமரனின் அறிவில் தோன்றும் பிரச்சினைகளும் அதற்கான் தீர்வுகளும் இருப்பதே அதற்கு சாட்சி. இருப்பினும் குழந்தைகளுக்குப் போதிக்கப்படும் நீதிக்கதைகள் போலானவை என அவைகளை எடுத்துக் கொள்ளலாம். பல நீதிக்கதைகள் பிசகுள்ளவைதான், இருப்பினும் நீதியை மட்டும் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

அரசர்கள், இவர்களின் பங்கு மிகப் பெரியது. சாமானிய மக்களுக்கு அரசனே தெய்வம். அதாவது அரசனெனப்படுபவன் வேத சாஸ்திரங்களைப் படித்து, இருப்பினும் அந்த சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்கும் மற்றும் தகுந்த நேரத்தில் தகுந்த அறிவைப் புகட்டும் குருமார்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு மக்களைக் காத்தவர்கள். அவன் மூலமாகவே கல்வி, அதாவது கல்வி என்பது இந்து என்ற சமுதாய அறிவையும் சேர்த்து, எல்லாவற்றையும் பெற்றனர். ஒரு அரசன் இங்கனம் நடத்தல் வேண்டும் என்ற கோட்பாடுகள் இருந்தன, அவன் மக்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று இருந்தன. காலம் போகப்போக அரசர்களும் சுயநலக் கிருமிகளாக மாறத்தொடங்கினர். அதன் விளைவே பாமரர்களின் பார்வையிலிருந்து அறிவு மறைக்கப் பட்டதும், ஒடுக்கப்பட்டதும். அந்த நேரத்தில் அரசனுக்கு சமமான பண அந்தஸ்தில் இருந்தவர்களுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. ஆகவே மக்களும் முறையாக இந்து சமுயதாயத்தில் குறிப்பிடப்பட்டவையைத்தான் வழிதொடருகிறோமா இல்லையா என்றும் தெரியாமல் அந்த அந்த ஊர் கோவில்களே கதியென்றும், பின்னர் புகுத்தப்பட்ட சமயமே கதியென்றும் திரிந்து போயினர்.

பிற எந்த மதங்களும் இல்லாத காலம்தொட்டே இருந்து வரும் இந்து சமுதாயத்தில் இடையில் பரப்பப்பட்ட மற்ற மதங்களால் இந்து கேள்வி கேட்கப் படுவது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் இவர்கள் இந்து என்ற ஒன்றை ஆராயாதவர்கள், இந்து என்ற அமைப்பு ஆயிரம் அடி உயரம் என்றால், இவர்கள் தன் ஆறடி உயரத்தின் சமதளத்தில் சாதிய முறைகள் புகுத்தப் பட்ட தற்காலத்து இந்து மதத்தை வைத்து இந்து சமுதாயத்தைக் கேலி பேசுகிறார்கள். இவர்களைக் குற்றம் கூறியும் ஒன்றுமில்லை, ஏனெனில் இந்து மதத்தில் இருப்போர்களில் பலருக்கே இந்து சமுதாயம் பற்றிய ஞானம் இல்லாதது வருந்தத்தக்கது. இருப்பினும் ஒரு மதத்தின் ஆணி வேரையே புரிந்து கொள்ளாமலும் ஒரு சமுதாயம் வாழக் கூடிய அளவிற்கான அதிகபட்ச சுதந்திரம் உள்ள சமுதாயம் இந்து என்பதில் நான் மகிழ்கிறேன். இந்து முறையில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டியவர்களும் இந்துவிலிருந்தே வந்தவர்களென்பதாலும், அத்தகைய சுதந்திரத்தைக் கூட ஒருவனுக்கு இந்து சமுதாயம் வழங்குகிறது. இந்தியாவிலேயே காதல் கலப்பு திருமணங்கள் அதிகம் ஏற்படுவதும் இந்து சமுதாயத்தில்தான் நடக்கிறது. ஆக வெகு விரைவில் இந்த சாதிய முறைகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது. அதேபோல் பல இடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் என சொல்லப்படும்போது எப்படி உண்மையை உணர்ந்த முஸ்லீம் வருத்தப்படுகிறானோ அதே போல இந்து சமுதாயம் என்றதும் சாதிக் கூத்துகளைப் பேசி, சாதி என்ற ஒன்றில்தான் இந்து சமுதாயமே இருக்கிறது என்று பலர் கூறும்போதும் ஒரு உண்மையான இந்து வருத்தப்படுகிறான். எப்படி அந்தத் தீவிரவாதிகள் மதத்தின் பேரைச் சொல்லிச் செய்தாலும் அறியாமையில் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களோ அதே போல இந்த இந்து சமுதாயத்தில் சாதிய வெறி முறைகளை கடைபிடிக்கிறார்களோ அவர்களும் மதத்தின் மீதுள்ள அறியாமையில் செய்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சாதி என்பது மதத்திற்குள்ளானதே அல்ல. அது சமுதாயத்திற்குள்ளானது, அதாவது இந்து சமுதாயத்திற்கு உள்ளானது எனக் கூறவில்லை, மக்கள் வாழும் சராசரி சமுதாயத்திற்குள்ளானது. இன்றும் பல தமிழகக் கிருத்துவர்கள், சாதி பார்த்துத்தான் பெண் கொடுத்து எடுக்கின்றனர், என்பதும் நான் கண்கூடாக கண்டறிந்தது. ஆக இவர்களுக்கு கடவுள் எதுவானாலும் சாதி என்பதில் நிலையாக இருக்கிறார்கள். ஆகவேதான் கூறுகிறேன் சாதி என்பது இந்து மதத்திலுள்ளது அல்ல, அது மக்களின் வாழ்க்கையைச் சார்ந்தது. இந்து சமுதாயம் ஒரு போதும் சாதிக் கொடுமைகளை அதன் கோட்பாடுகளில் ஆதரிப்பதில்லை, மற்றபடி இன்ன பிறக்கள் புகுத்தப்பட்டவையே! விவேகானந்தருக்கு அடுத்து யாருமே இந்து என்ற சமுதாயத்தை சரியான தொனியில் உச்சரித்ததில்லையோ என்றே எனக்கு தோன்றுகின்றது!



இவையெல்லாம் எனக்கு தோன்றும் சில கருத்துக்கள். பொதுவாகவே ஆண் முரட்டு சுபாவம் கொண்டவன். எப்படி ஒரு தீக்குச்சி விளக்கெரிக்கவும் வீடெரிக்கவும் பயன்படுகிறதோ அதே போல்தான் ஒரு ஆணின் கோபமும் இருக்கிறது. என்னுடன் பழகிய, அல்லது நான் பழகிய பல நபர்களில் பல ஆண்கள் தத்தம் தங்கைகளை, அக்காக்களை யாராவது கேலி செய்தாலோ, ஈவ் டீஸிங் செய்தாலோ தயங்காமல் அடிதடியில் இறங்கிவிடுபவர்களாக இருக்கிறார்கள். ஆக தன்வீடு என்று வரும்போது ஒரு கோபம் சமுதாயத்தைச் சூறையாடும் அளவிற்கு ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி இருப்பவர்கள் 100% பெண்களைக் கேலி கிண்டல் செய்யாமல், அவர்களை துஷ்பிரயோகம் செய்யாதவர்களா எனக் கேட்டீர்களானால் இல்லையென்றுதான் சொல்லுவேன். ஏனெனில் அவர்களே சில பெண்களை சைட் அடிப்பதும், அளவுக்கு மீறி அவதூறான சொற்களால் கிண்டலடிப்பதும் (அப்பெண்களின் காதில் படாதவாறு) உண்டு. எனது பள்ளிப்படிப்பின் பொழுது நடந்த இது போன்ற ஒரு சம்பவத்தின் பொழுது தன் வீட்டில் நடக்கும் பொழுது கோபப்பட்டவன் இன்றைக்கு அடுத்த பெண்ணை கிண்டல் செய்கிறானே என்று எனக்குத் தோன்றினதாலும் ஒரு மான உணர்வு ஏற்பட்டதாலும் இதுவரை நான் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்ப்பதில்லை தவறான எண்ணத்தில். இதை நான் என் நண்பர்களிடமும் வலியுறித்திக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னால் எத்தனை பேர் திருந்துவது? எத்தனை பேர் பெண்ணுக்கு மரியாதை செலுத்த ஆரம்பிப்பது? ஆனால் ஒன்று நிச்சயம், எனக்கு இந்த குணம் முக்கால்பாகம் என் அப்பாவிடமிருந்து வந்ததுதான். என் அப்பா பெண்களுக்கு ஏக மரியாதை கொடுப்பவர், தாய், மனைவி இருவரையும் கண்கலங்க வைப்பவன் நல்ல மனிதனே இல்லையென்பார். நானும் அப்படியே வளர்ந்துவிட்டேன்.

ஒரு தந்தை தனது மகளை கொஞ்சம் அடக்கத்தோடு இரு, இல்லையெனில் உனக்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார் என்றால், ஒருவேளை அவருக்கும் ஒரு மகன் இருப்பானென்றால், அடுத்த கட்ட நடவடிக்கையாக தன் மகனிடம் "மகனே, உன் தங்கைக்கு சில நாய்களால் ஏற்பட்ட துர்பாக்கிய நிலையை நீ இன்னொரு பெண்ணுக்கு இழைத்துவிடாதே" என நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல சொல்லுதல் அவசியம். ஊரிலுள்ள பல பெற்றோர்கள் ஆணதிக்கத்தையே விரும்புவதாலும், தன் மகனின் போக்கில் அலட்சியம் காட்டுவதாலும், அவனை நல்வழிப் படுத்த முடியாமல் தோற்றவர்களுமேதான் தத்தம் பெண்களையும் வருங்கால சந்ததியையும் பெண்ணடிமை கொண்டு அழித்தவர்கள். ஒரு தந்தை தன் மகளைக் கிண்டல் செய்த ஒரு பொறுக்கியைத் திட்டித் தீர்த்துவிட்டு வீடு திரும்புகையில் தன் பையனை எவனோ ஒருவன் இப்படித் திட்டித் தீர்ப்பான் என்ற சொரணை வர வேண்டும், அந்தப் பையனுக்கோ இன்னொருவனின் தங்கை அல்லது அக்காள் இப்படி அவதிப் படுவாளோ நம்மாலென்ற எண்ணம் வர வேண்டும். ஆக இது ஆணிவேரிலிருந்து அழிக்கப் பட வேண்டுமாயின் குடும்ப அமைப்புகளிலே இது ஆரம்பிக்கப் படவேண்டும்.

ஒரு பெண்ணைக் கேலி செய்யும் ஆண் வானத்திலிருந்து குதித்து விடவில்லை, அவனும் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாகி, உருவாகி, பிறந்து, வளர்ந்துதான் வருகிறான். ஆக பெண்ணடிமையை எதிர்த்து, பெண் உணர்வு அழிப்பை எதிர்த்து, பெண் உடல் சிதைப்பை எதிர்த்து குரல் கொடுக்கும் இன்றையை பெண்களே முதலில் கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே ஒரு முறை பார்த்து கேள்வி கேளுங்கள் "நாம் நம் மகனை பெண்களை மதிப்பவனாக, பெண்களின் சம உரிமையை போதிப்பவனாக வளர்த்திருக்கிறோமா?" என்று. உங்கள் பதில் இல்லையென்று இருப்பதானால் நீங்கள் உங்களுக்காக வெட்கப்பட்டுக்கொண்டு, மறுமுறை சம உரிமை பற்றிப் பேசாதீர்கள், அல்லது உங்கள் மகனை திருத்திவிட்டு பிறகு சம உரிமை பற்றிப் பேசுங்கள். சின்ன வயதிலிருந்தே தன் மகனை வாராவாரம் கோவிலுக்குக் கூட்டிச் சென்று, இறைவனையும், பக்தியையும் போதிக்கும் பெண்ணினமே முதலில் உன் மகனுக்கும் மகளுக்கும் பெண்ணுரிமையின் தாகத்தை, அதன் அவசியத்தை விளங்கவை, பெண் அன்பை போதிக்கும் முதல் கடவுள் என்பதை புரிந்து கொள்ள வை. குழந்தையை அபாக்கஸில் சேர்த்து படிப்பை போதிக்கும் பொழுதே அக் குழந்தையை சமூகத்தினில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று பழக்கு, முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் (அதாவது மேலை நாட்டில் ஒரு பழக்கமுண்டு good touch, bad touch என்று, ஒரு குழந்தையின் மர்ம பாகத்தை தாய் தொட்டுக் காண்பித்து இது bad touch என்றும், கை போன்ற இடங்களைத் தொட்டுக் காண்பித்து good touch எனவும் சொல்லித் தருவாள். ஒவ்வொரு முறை பள்ளி முடித்து குழந்தை திரும்பியதும் யாராவது bad touch செய்தார்களா என அறிந்து கொள்ள இது உதவும்) போன்றவற்றை சொல்லித் தருவதால் பெண் குழந்தை அறியாமையில் எங்கும் வீழ்ந்திடாது பாதுகாக்கப் படுகிறது. இதுதான் ஆக சிறந்த வழி, ஒரு சமுதாயம் நிரந்தரமாய்த் திருந்தவேண்டுமெனில் குடும்ப அமைப்பே முதலில் திருந்த வேண்டும். ஆனால் இதற்கு காலம் பிடிக்கும். எத்தனை காலம் பிடிக்கும்? ஐந்து வருடத்திற்கு முன்னர் பிறந்த குழந்தையிலிருந்து இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகள் தத்தம் காளையர் வயதை அடையும்போது ஒரு திருந்திய சமுதாயத்தை நாம் உருவாக்கி விட்டிருப்போம். அதாவது அதிக பட்சம் 16 முதல் 20 ஆண்டுகள். பல காலமாக வரும் பெண்ணடிமை யுகத்தில் இந்த ஆண்டுகள் சொற்பமே என்று எண்ணுதல் வேண்டும். ஆயினும் இத்தனை ஆண்டுகளில் நாம் ஒரு திருந்திய சமுதாயத்தை ஏற்படுத்தியிருப்போம் என்ற நம்பிக்கையும் வேண்டும்.

மேலும் இன்றைய உலகில், பல பெண்கள் குறைந்தது 12ம் வகுப்பு வரையாவது படிக்கிறார்கள். ஆக அவர்களுக்கு ஏற்பறிவாவது இருக்கும். தன் குழந்தைகளை வளர்க்கும்போது எப்படிப் பட்டவனாக வளர்க்க வேண்டுமென்று அவளுக்கு புரியும் அல்லது நாம் புரியவைத்தல் வேண்டும். இது ஒரு பதினாறாண்டுகால திட்டம். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுமுனையில் சில ஓராண்டு திட்டம் முதல் ஐந்தாண்டு திட்டங்கள் வரை ஆரம்பிக்கப் படவேண்டும். அதாவது இன்றைய தனியார் அலுவலகங்களில் குறைந்தது 100 பெண்கள் வேலை பார்க்குமிடத்திற்கு அரசாங்க பரிந்துரை வேண்டுமானால் அதற்கு பெண்களுக்கு கவுன்சலிங், குறைகேட்கும் வசதி செய்யப் பட்டிருக்கவேண்டும் என்ற அரசாணை போன்றது. இது போல பல அரசாணைகள் சுகாதாரம் போன்றவைகளுக்கு இருந்தாலும், அவையெல்லாம் ஒழுங்கான முறையில் நடப்பதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், 100ல் ஒரு நிறுவனமாவது இதை ஒழுங்காக கடை பிடித்தாலும் நமக்கு நன்மைதானே! இப்படிப்பட்ட பெண்கள் குறை தீர்ப்பு மையம் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் அதை எதிர்த்து ஸ்ட்ரைக் போன்ற போராட்டங்களை முன்னிருத்தி நடத்த அகில இந்திய பெண்கள் குறை தீர்ப்பு மைய சங்கம் ஒன்று நிறுவப் பட வேண்டும் (இந்திய மாணவர்கள் படை என்பது போல, செயல் சுத்தமானதா என விவாதிக்க இது நேரமில்லை, அங்கேயும் ஓட்டைகளென்பதும், கையூட்டுகள் என்பதும் இருக்கத்தான் செய்யும், ஆயினும் எங்கே தன் வாசலில் கொடி பிடிப்பார்களோ என்ற அச்சமும் நிறுவனத்திற்கு கொஞ்சம் இருக்கும்). முக்கியமாக இந்த துறையைச் சார்ந்தவர்களில் ஒரு ஆண்களும் இருத்தல் கூடாது, அனைத்து பதவியிடங்களும் பெண்களாலேயே நிரப்பப் படவேண்டும். என்னிடம் யோசனை கேட்டால் ஒவ்வொரு பெரிய நிறுவனமும் எப்படி செக்யூரிட்டி வேலைக்கு பல தனியார் நிறுவனங்களை சார்ந்து அங்கிருந்து பணியாட்களை எடுத்துக் கொள்கிறதோ அதே போல சமூக நல வாரியங்களான லயன்ஸ் க்ளப் போன்ற இடங்களிலிருந்து முழுக்க முழுக்க ஆண்களின் பார்வைக்கு கீழே வராத ஒரு பெண்கள் சார்ந்த மையத்திலிருந்து ஆட்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஓய்வு பெற்ற சிறந்த பெண் நீதிபதியை இந்த அகில இந்திய பெண்கள் குறை தீர்ப்பு மையத்தின் தலைமையாக நியமிக்கலாம். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இந்தத் தலைமை மாற்றப்படவேண்டும், ஒரு குடியரசுத் தலைவர் எப்படி நியமிக்கப் படுகிறாரோ அதே போல (இதை வாசித்த பொழுது சிலர் சிரித்திருக்கக்கூடும், குடியரசுத் தலைவரின் சக்தி பற்றி இந்தியா அறியாததா என, இருப்பினும் அப்படி ஒருவராவது நமக்கு இருத்தல் அவசியம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்).

இந்த பதினாறாண்டுகால திட்டத்தின் முதல் நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், எப்படி செயலாற்றுவது என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம். என் பங்கிற்கு ஒரு வழி நான் சொல்லுகிறேன். ஒவ்வொரு வருடமும் அரசாங்க பெண்கள் சம உரிமை நாள் ஒன்றை ஏற்படுத்தி, அதாவது ஜனவரி மாதத்தின் முதல் வேலைநாள் போன்ற நாட்களைத் தேர்ந்தெடுத்து, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரிகள் இவையனைத்திலும் பெண்களின் சம உரிமையைப் பற்றி வகுப்புகள் எடுக்கப் படவேண்டும். அன்றைய தினத்தில் மாணாக்கர்களுக்கு விடுமுறையை அளிக்காமல், அரங்கத்தில் வைத்து அவர்களுக்கு நான் மேலே கூறிய கருத்துக்களை நாம் கற்பித்தல் வேண்டும். மீதத்தை நீங்கள் சிந்தித்து சொல்லுங்கள்.





காலம்
என்னையொரு வெள்ளைத்தாளாகவும்
உன்னையொரு பேனாவாகவும்
எழுதிச் சென்றது

நீ
என்னிலெழுதிப் போன
எழுத்துக்களால் அர்த்தம்
பெற்றுவிட்டேன்

நிரப்பிய உனக்கெப்படி
புரியாமல் போனது
காலம் என் உறையில்
உன் முகவரியைத்தான்
எழுதியிருக்கிறதென்று?!




என்னுள்ளிருந்த மிருகம்
வெளிப்பட்டது இதுவே
முதல் முறையாயிருக்கலாம்.

தெரிந்தோ தெரியாமலோ
நீ உடைத்து விட்ட
புகைப்படத்தின்
கண்ணாடிக் கூடு
காட்டியது என்
நடுங்கும் விரல்களையும்
உடைந்த மனதையும்.

என் அணுக்கள்
எல்லாம் பரவிக்கிடக்கும்
என்னவள் இப்பொழுது
ஒரே ஒரு புகைப்படத்தில்தான்
உயிர் வாழ்கிறாள்.

கண்கள் கடந்து
விழுந்தது கண்ணீர்
வழியே உன் தாய்
மீதான பாசம்.

உன் பிஞ்சுக்
கரங்களால் என்
கன்னத்தில் கைவைத்து
"அழாதே அப்பா"
என்றாய்.

உடைந்த கண்ணாடியில்
அவள் முகம் மேல்
உன் பிம்பம்!




யாருமற்ற வெளியில்
உன்னைக் கடந்தபோது
ஒரு வினாடி
என்னைப் பூசிக்கொண்ட
போலி நீ!

என்னை
உள்ளிறக்கிக் கொள்வது போல்
பாசாங்கு காட்டுகிறாய்.

நான்
தள்ளிப் போனதும்
அடுத்த பிம்பத்திற்குத்
தயாராய் நீ!

- சிறுகதை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. சுட்டி http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

சில நாட்களாகவே ஊருக்கு புதிதாய் வரப்போகும் பேருந்து நிலையத்தைப் பற்றிய பரபரப்பு பேச்சுகள் அதிகரித்திருந்தன. முக்கியமாக ஊருக்கு நடுவில் வரப் போவதால் சுற்றியுள்ள புறம்போக்கு இடங்கள் அகற்றப்படுமென்ற ஒரு அச்சமும் பலரிடம் இருந்தது. அதில் பாதிக்கப்பட முடியாத இடத்திலிருந்தவர்களில் பலர், "ஊருக்கு நல்லதுன்னா எடத்தை கொடுத்துத்தானே ஆகணும்" எனவும், இடத்தை இழக்கும் அபாயத்திலிருப்பவர்களோ, "இந்த ஊருக்கு பஸ் ஸ்டாண்ட் வந்து என்ன ஆகப் போகுது, இந்த ஊர்ல இருந்து எந்த பஸ்ஸும் கிளம்புறது இல்லை, வர்ற பஸ் ஒரு நிமிசம் நின்னுட்டு போகுது, இதுக்கு எதுக்கு எடத்தையெல்லாம் இடிக்கணும்" எனவும் பலவிதமான குரல்கள் எழுந்த வண்ணமிருந்தன. பேருந்து நிலையத்திலிருந்து நூறடி தூரத்திலிருக்கும் எங்களது வீட்டையும் இடிக்கப் போவதாக சொல்லிச் சென்றார்களாம். அந்த ஊர் பிறந்த போதே அங்கு கட்டப்பட்ட நான்காவது வீடு எங்களுடையதுதான். முப்பதுக்கும் மேற்பட்ட வருடம் அங்கேதான் வசித்து வருகிறோம். அப்படியே பெருக ஆரம்பித்த வீடுகளால், வந்து போகும் பேருந்துகளும் அங்கேயே நிறுத்தப் பட்டன. இப்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வந்துவிட்டன. ஊருக்குள் சில பிரிவினருக்குள் சண்டை வேறு, அதனாலேயே ஒரு பிரிவினர் கொஞ்சம் கூடுதலாக வாழும் அந்தப் பகுதியில் பேருந்து நிலையத்தை அமைத்து பல வீடுகளை இடிப்பதற்கு திட்டம் போட்டனர்.

இது போன்ற பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே அப்பாவிடம் அவ்வப்பொழுது ஏதும் பிரச்சினையா எனக் கேட்டுக் கொள்வேன். அன்று அப்பாவிற்கு போன் செய்துவிட்டு வைத்ததிலிருந்தே மனசு பாரமாகிவிட்டது. "நம்ம வீட்டையும் இடிக்கப் போறாங்களாம்ப்பா, அளந்து போட்டுட்டு போயிட்டானுவ, இப்போதைக்கு பின்னால இருக்க உங்க அண்ணன் வீட்ல தங்கிக்கணும், வேற வழியில்லப்பா" அவர் சொல்லிவிட்டு முடித்த சொற்கள் காதுக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. எங்கள் வீட்டில் நானும், என் அண்ணனும்தான். அவனுக்கு கல்யாணம் முடிந்த கையோடு எங்கள் வீட்டை ஒட்டி பின்னால் இருந்த இடத்தை வாங்கி, அதிலேயே வீடும் கட்டிக் கொண்டான். எங்கள் வீடு அளவிற்கே அதுவும் இருக்கும், இரண்டு இடத்தையும் சேர்த்தால் ஒரு பெரிய சதுரம் போல இருக்கும். ஆனால் அவன் இருப்பதோ பட்டா இடம். அண்ணனிடம் அப்பா "மிச்சமிருக்க இடத்துல உன் தம்பியும் நாங்களும் வீட்டை கட்டிக்கலாமாப்பா, எல்லோரும் ஒன்னா இருக்கலாம்" எனக் கேட்டதற்கு "இல்லப்பா, எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க, எடத்தையெல்லாம் கொடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டான் என வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்.

சென்னையில் வேலை பார்க்கும் நான் பணி நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டி இருந்ததால் சரியான நேரத்தில் அப்பாவிற்கு உறுதுணையாக இருக்க முடியாமல் போய்விட்டது. இது ஒரு சிறிய அலுவலகம்தான். நான் படித்தது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், மேலும் படிக்கவும் இயலவில்லை ஏதேதோ சின்ன சின்ன காரணங்களால், ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் என்னருகே வராததும் வேறு பெரிய நிறுவனங்களுக்கு போகவிடாமல் என் காலை அந்த அலுவலகத்திலேயே கட்டிப் போட்டிருந்தது. இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்து இப்பொழுது மூன்று வருடம் கழித்து பனிரண்டாயிரம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

அன்று காலையே விட்டை இடித்திருக்கக் கூடும், நான் அவசர அவசரமாக வேலையை முடித்து விட்டு காலையில் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே கோயம்பேடு வந்து ஊருக்கு கிளம்பிவிட்டேன். சன்னலருகே கிடைத்த ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே தொடர்ந்தது என் பயணம். முந்தைய இரவின் விமானப் பயணத்தின் களைப்பும், தூக்கமின்மையும், வீட்டைப் பற்றிய எண்ணங்களும் சேர்ந்து கண்களில் ஒரு சோர்வையும், கொஞ்சம் கண்ணீரையும் பரிசளித்தபடி இருந்தன. இதற்கு முன்னர் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும், நான் ஓடி விளையாடிய அந்த வீட்டிற்கு மீண்டும் செல்கிறேன் என்ற களிப்பு இருக்கும்.

அது ஒரு அழகான வீடு. வீட்டின் முற்றம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மரம்தான் இருக்கும். அங்கே இருக்கும் புளியமரத்தின் கிளைகள் நான் சிறு வயதாய் இருக்கும் பொழுதே எட்டும். உயரமாக வளர வேண்டுமென்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்குவேன். அதிலிருக்கும் புளியம்பழத்தையும், குருத்து இலைகளையும் தின்பதுண்டு. அதன் நிழலில் அமர்ந்து கொண்டு நண்பர்கள் பட்டாளத்தோடு கதை பேசுவதும், சின்னக் குழி தோண்டி, தண்ணீர், கொஞ்சம் இலை, மற்றும் பெயிண்ட் எல்லாம் கலந்து ஒரு புட்டிக்குள் ஊற்றி அதை புதைத்து, கொஞ்ச நாள் கழித்து எடுத்து பார்ப்போம். பக்கத்திலேயே கொடுக்காப்புளி மரமிருக்கும். நீள துரட்டி வைத்து அதிலிருக்கும் பழங்களைப் பறித்து தின்போம். வாழை, மாதுளை, கொய்யா, நார்த்தை, கருவேப்பிலை, துளசி, கத்தாளை, முருங்கை என மரங்களும் செடிகளுமாக இருக்கும். காலையில் ஒவ்வொருவரும் குளிக்கும்போதும் ஒவ்வொரு மரத்தடியில் நின்று குளிப்போம், குளிக்கும் தண்ணீர் அந்தந்த மரத்திற்கு போய்ச்சேரட்டுமென்பதற்காக. என் அப்பா இரும்புப் பட்டறை வைத்திருப்பதால், எங்களுக்குத் தேவையான அரிவாள், துரட்டியில் இடும் இழுவை கொக்கியென சகலத்தையும் செய்து கொள்வோம்.

அம்மாவிற்கு காலைப் பொழுதுகள் ஆட்டுக்கும், மாட்டுக்கும் தீவனம் போடுவதிலும், எங்கள் வீடு, அண்ணன் வீடு முற்றம் வரைக்கும் காலை ஐந்து மணிக்கே எழுந்து தூற்றுப் பெருக்குவதிலுமாக விடியும். உடம்பிற்கு முடியாமல் போன காலத்தில் கூட அவள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பதை நிறுத்தவில்லை. சாயங்காலம் ஆகிவிட்டால் திண்ணைக்குத் தண்ணீர் தெளித்து வைப்பாள், பிறகு நாங்கள் வளர்க்கும் பசுவிடம் செல்லமாக பேசிவிட்டு பால் கறந்து காப்பி போட்டுத் தருவாள், மீதமுள்ள பாலை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து வாங்கிவிட்டு போவார்கள். எந்த ஊர் விழாவிற்கு போனாலும் இரவே வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் அவளுக்கு, வேறு எங்கு தங்கினாலும் தூங்க முடியாமல் சிரமப் படுவாள். வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும், நாங்கள் நால்வரும் சேர்ந்தே சுண்ணாம்பு அடிப்போம்.

அப்பாவிற்கு கிளி, நாய், பூனை வளர்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. ஒன்றுக்கொன்று எதிரி என படித்த பாடங்களனைத்தும் தோற்று மண்டியிடும் எங்கள் வீட்டில் அந்த சிநேகித பிராணிகளுடன். அப்பொழுதெல்லாம் அடிக்கடி அப்பா சொல்லுவார் "வளர்ப்புலதான் இருக்கு பொழப்பு" என்று, அது பசுமரத்து ஆணி போல பதிந்து போனது. இதை நினைக்கும்போதே ஏதோ ஒரு சின்ன சம்பந்தத்துடன் அண்ணனின் நினைவு வந்து போனதையும் தடுக்க முடியவில்லை. என்னையும் அவனையும் ஒன்றாகத்தான் வளர்த்தார்கள், அவனுக்கு மட்டுமெப்படி பாசம் குறைந்து போனது, அப்பா கேட்டும், கொடுக்க முடியாதென கூறுவதற்கு காரணம் அவன் மட்டும்தானா இல்லை அண்ணியுமா? எப்படியோ குடும்பத்தைப் பிரிக்க இது ஒன்றே போதுமானதாகிவிடுமோ? இந்த நினைப்புகள் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை, அதை மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். என்ன இருந்தாலும் அவன் அண்ணன், அவனுக்கும் இரண்டு குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் எதையாவது விட்டுச்செல்ல ஆசை இருக்கத்தான் செய்யும், அவன் வாங்கும் சம்பளமும் குறைவு, என்ன செய்வான் பாவம்? அப்பாவையும் அண்ணனிடம் கோபம் கொள்ளாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பதிந்தது. தவிர நானும் ஓரளவிற்கு மாதம் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் வரை சேமிக்க முடிகிறது. இதுவரை என் சம்பளத்தை அம்மா பேரில் கிராமத்து கூட்டுறவு வங்கியில் சேமித்துத்தான் வைத்திருக்கிறார் அப்பா. அதில் இருக்கும் பணத்தை வைத்து ஊர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடத்தை வாங்குவது பற்றிய பேச்சும் முதலில் வந்து போனது. அண்ணனின் மறுப்பிற்கு பிறகு, அந்த இடத்தை அப்பா வாங்கினார்.

ஊருக்கு செல்லும் கடைசிப் பேருந்தைப் பிடித்து சென்று கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல வீட்டு ஞாபகம் என் நெஞ்சைத் துளைக்க ஆரம்பித்தது. இரண்டு நெற்குதிர்களுக்கு நடுவில் கண்ணாமூச்சி ஆட்டத்தின் போது ஒளிந்து கொண்டது, அம்மியில் சட்னி அரைத்து கொண்டிருந்த அம்மாவின் கழுத்தைப் பின்னாடியிருந்து கட்டிப் பிடித்து ஆடியது, அண்ணன் என்னை அடிக்கத் துரத்தி வந்த பொழுது ஓடிப் போன நான் அடுக்களையில் அரைத்து வைத்திருந்த தோசை மாவை கொட்டிக் கவிழ்த்தது, புளியமரம், அப்பாவின் இரும்புப் பட்டறை, அங்கு துருத்தி ஊதவும் அப்படியே உலகக் கதை பேசவும் வருகின்ற அப்பாவின் வயது ஒத்தவர்கள், மார்கழி காலத்தில் வீட்டு வாசலில் இடும் கோலம் அப்பொழுது அம்மாவிடம் "யம்மா, ஏம்மா நம்ம வீட்டு கோலத்துல மட்டும் நடுவில சாணி வச்சு பூ வைக்கல" எனக்கேட்ட சிறுபிள்ளைக் கேள்வி, அதற்கு "வயசுப் பொண்ணுங்க இருக்க வீட்டுல வைப்பாங்க, இங்க யாரு இருக்கா" என அம்மா சொன்ன பதில், அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அடம்பிடித்த தருணங்கள், என்னை விட உயரமான அடிகுழாயின் கைப்பிடியை தொங்கிக் கொண்டே குதித்து குதித்து அடித்தது, கிளிக் கூண்டு, மூன்று மாதம் முன்பு நான் நட்டு வைத்த மாஞ்செடியொன்று இப்படி நினைவு துளிகள் ஒவ்வொன்றும் கண்ணீராக வழியத் தொடங்கியது, தொண்டையின் எலும்பு விக்கி விக்கி எச்சில் வற்றி மேலும் முடியாமல் கீழேயே நின்று விட்டது, நடத்துனர் "ஏ சுந்தரம் மகந்தானே நீயி, எறங்குப்பா, ஓன் ஊரு வந்துருச்சு" எனக்கூறி தோளைத் தட்டிய போதும் எனக்கு அந்த இடம் நினைவுக்கு வராததாய் இருந்தது.

விடிய விடிய யாராவது நின்று பேசிக் கொண்டே இருக்கும் பஜார் எங்கள் ஊரினுடையது, இப்பொழுது ஆளே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. இரண்டு பேருந்து எதிரெதிரே வந்தால் நிதானித்து மட்டுமே ஒன்றுக்கொன்றை கடந்து போகும் சாலையில், இப்பொழுது நான்கு பேருந்து ஒன்றாய் செல்லக் கூடிய அளவிற்கு இடம் இருக்கிறது. லெச்சுமி அக்கா வீடு, பாக்கியமாச்சி வீடு, பண்டார மாமா வீடு, மூக்கைய்யா அண்ணன் வீடு, செல்வன் கடை, ஸ்டீபன் கறிக் கடை, கீழ் வீட்டுப் பாட்டியின் பசு மாட்டுத் தொழுவம், என இடமும் வலமும் வெற்றிடமாகவே இருந்தது. என் வீடு இருந்த இடத்தை புளியமரம் மட்டும் ஞாபகப் படுத்தியது எனக்கு. செங்கல்களும், கட்டைகளுமாக பரவிக் கிடந்தது. உடைந்த கற்களின் மீது அப்பா உறைந்து உட்கார்ந்தபடியே இருந்தார். அண்ணன் வீட்டில் எல்லோரும் தூங்கியாயிற்று, அம்மாவும் ஒரு கயிற்றுக் கட்டிலில் அசதியில் தூங்கியிருந்தாள்.

அப்பாவை அப்படிப் பார்த்ததும் கதறியழத் துவங்கிவிட்டேன். என்னைச் சமாதனப் படுத்த அப்பா பல ஆறுதல் கூறிவிட்டு "கிறுக்குப் பயலே இதுக்கெல்லாம் அழுதா கதைக்கொப்புமா, ஊரே இடிஞ்சு போச்சு, இனி ஆக வேண்டிய சோலிய பாப்பியா, அழாதல அழாதல" என கூறிக் கொண்டிருக்கும்போதே அவரின் குரலும் கம்மியது. அழுது விடக் கூடாதென தொண்டையை இருமிக் கொண்டே, போயி சாப்பிடு "ஏ மாரி, உம்புள்ள வந்துட்டான், அவனுக்கு சாப்பாடக் கொடுத்து தூங்க வை, நான் பஜாருக்குப் போறேன்" அங்கிருக்க மனமின்றி அப்பா கிளம்பிவிட்டார்.

அம்மா விமானப் பயணத்தை விசாரித்து விட்டு, சோறு வைத்து ரசம் ஊற்றிக் கொடுத்தாள், கொஞ்சம் உப்பு அதிகமாய் இருந்தது, அவள் கண்ணீர் விட்டிருந்திருக்கக்கூடுமென எண்ணிக் கொண்டேன், வறண்ட தொண்டையை கிழித்துக் கொண்டே சென்றது பருக்கைகள். அம்மா பொறியலொன்றை வைத்துக் கொண்டே அழுது அழுது கம்மிய குரலில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள், என் காதில் எதுவுமே சரியாக விழவில்லை. தட்டிலேயே கையைக் கழுவிவிட்டு அம்மா மடியிலேயே படுத்துக் கொண்டேன். என் தலையைத் தடவி விட்டுக் கொண்டே "இந்த மனுசன் கல்நெஞ்சக் காரன், சொட்டுக் கண்ணீர் விடலியே, இந்த வீட்டக் கட்டி முடிக்க எம்புட்டுப் பாடு..." என இழுத்துக் கொண்டே இருந்தாள், நான் அதற்கு மேல் ஒன்றும் கேட்க முடியாமல் தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்ததும் வெளிச்சமாய் இருந்தது, அண்ணன் வேலைக்கு கிளம்பிவிட்டிருந்தார், அண்ணி பஜாருக்குப் போயிருந்தார்கள். அம்மா காப்பியைக் கையில் வைத்துக் கொண்டு பல்தேய்க்கச் சொன்னாள். வாங்கிப் போட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, வீடு வந்தோம் நானும் அப்பாவும்.
"அம்மா, இதுல எண்பதாயிரம் பணமிருக்கு எங்க கம்பெனி ஓனர் கொடுத்தது, இந்தப் பணத்துக்காக நான் அஞ்சு வருசம் அதே கம்பெனியில வேலை பாக்கணும், இதை வச்சு வீடு கட்டுங்க, எனக்கு லீவு இல்ல, நான் சாயந்திரம் முதல் வண்டிய புடிச்சாதேன் சென்னைக்குப் போக முடியும், நானிங்க இல்லீன்னு வருத்தப் படாதீக, வேற வழியில்ல..." சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். அப்பா எதுவுமே பேசாமல் நான் அந்தப் பேருந்து நிலையம் செல்லும் வரை உட்கார்ந்த படியே பார்த்துக் கொண்டிருந்தார்.

நான்கு மாதம் கழிந்து விட்டது, புதுவீடு பால்காய்ச்ச ஊருக்கு வந்தேன். வீடு போக மீதமுள்ள இடத்தில் அங்கு நான் நட்டு வைத்த மாஞ்செடியை மறக்காமல் அப்பா நட்டு வைத்திருந்தார். கொஞ்ச தூரத்தில் புளியங்கொம்பு ஒன்றையும் நட்டு வைத்திருந்தார். அண்ணன் முகம் வாட்டமாயிருந்தது, அது அவரது குற்ற உணர்ச்சியாலும் இருந்திருக்கலாம். அவரும் அண்ணியும் பால்காய்ப்பு வேலைகளை முன் நின்று முடித்துக் கொடுத்து விட்டு தூங்கப் போய்விட்டனர். அப்பா மட்டும் வீட்டிற்குள்ளே வராமல் வெளியே இருந்து சாப்பிட்டுவிட்டு பஜாருக்குப் போய்விட்டார்.

காலையிலேயே என் இரண்டாவது பையன் எழுப்பினான்.

"அப்பா, தாத்தா செத்துட்டாராம்"

நானும் என் குடும்பமும் முழு தேர்வு விடுமுறைக்கு வந்திருந்தோம். காலையில் ஐந்து மணி இருக்கும், என் அம்மா வராந்தாவில் அப்பா படுத்திருக்கும் கயிற்றுக் கட்டிலில் அவர் கால் பக்கத்தில் சாய்ந்து அமர்ந்தபடியே இருந்தாள். அவர் இந்தப் புதுவீட்டின் உள்ளே ஒரு முறை கூட வந்ததே இல்லை. கொல்லைப்புறத்தில் இருக்கும் கழிவறைக்கு வீட்டைச் சுற்றிக் கொண்டு போவார், வராந்தாவின் கயிற்றுக் கட்டிலிலேயே படுத்துக் கொள்வார். என் மனைவியும், பெரிய மகனும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். நடந்து சென்று என் அப்பாவின் மூச்சைப் பார்த்துவிட்டு, அது நின்று போயிருந்ததை உணர்ந்து பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டேன்.

"அப்பா, இன்னிக்கு குற்றாலம் போலாம்னு சொன்னில்ல, போறோமாப்பா?"

"வீட்டுக்குள்ள போயி அம்மாவை எழுப்பு, அப்பா இன்னொரு நாளைக்கு உன்னைக் கூட்டிட்டுப் போறேன்"

அம்மா என்னைப் பார்த்தாள்... அவளுக்கு வெறுமை சூழ்ந்துகொண்டதை என்னால் உணர முடிந்தது.

"டேய், இவரு கல்நெஞ்சக்காரனில்லடா, நெஞ்சழுத்தக்காரன், கடைசி வரைக்கும் வீட்டுக்குள்ள வரவே இல்லையே..."

எனக்கு அப்பொழுது அழத் தோன்றியது...




தேடல்கள் சில
தாண்டி வந்த
இளவெயில்த் துண்டு
புன்னகை புரிந்து
நின்றது.

அதன்
எண்ணத்திலும்
வண்ணத்திலும்
ஈர்க்கப் பட்டவனாய்
அதனைக் கைக்குள்
அடைக்க முற்பட்டேன்.

என்
இடையறிவை
இழிந்து கொண்டு
அது என்
புறங்கை மேலே
புன்னகைத்தது மீண்டும்
சுதந்திரமாய்.


வார்ப்பில் வெளியிட்டமைக்கு நன்றி


::: 32 கேள்விகள் - தொடர் பதிவு


இருப்புக்குள் மீண்ட நண்பன் ரிஷான் ஷெரீபிற்கு புதுவாழ்க்கைக்கான வாழ்த்துகளையும், எனை தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கான அன்பு கலந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டு தொடங்குகிறேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

இயற்பெயர் பிடிக்காதவர் உண்டு, புனைபெயர் பிடிக்காதவர் உண்டா? எனது இயற்பெயரின் அர்த்தத்தினை தூய தமிழ்சொல்லால் வடமொழிக் கலப்பின்றி எழுத நினைத்து, எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஜூன் 3, 2009. அர்த்தமற்றுப் போன சம்பவங்களால் சில முறை அழுவதுண்டு, அழுததால் அர்த்தம்பெற்றுக் கொண்ட சில அழுகையுண்டு, இது இரண்டாம் வகை. என்னையும், என் தோழனையும், என் தோழியையும் பற்றி வெகுவாக அன்பு மட்டுமே கலந்த அர்த்தம் கொள்ள துணைவந்த துளிகளவை! வாழ்க!

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

வெகு சில நேரம் மட்டுமே. எனக்கான நிலையான கையெழுத்தென்பது இல்லை போலும். அவ்வப் பொழுது இருக்கும் மனநிலைக்கேற்ப கையெழுத்தும் மாறும். ஒரு நல்ல கையெழுத்தின் சொந்தக்காரரால் ஈர்க்கப் பட்டால் சில நாட்கள் அழகாகவே இருக்கும், மீத நாட்களில் கிறுக்கல்களே! என் கையெழுத்து என்பதால் பிடித்தம் கொஞ்சமுண்டு.

4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா சமைத்த மதிய உணவு வகைகள் அனைத்தும்!

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

பார்த்தவுடனோ, கேட்டவுடனோ பலரைப் பிடித்து, சிலரைப் பிடிக்காமல் போனதுண்டு. பிடித்தவரை பிடிக்காதவராய் மாற்ற முடிந்தவரை விடமாட்டேன், பிடிக்காதவரை பிடித்தவராக்க எளிதில் அனுமதிப்பதுண்டு. பேச்சளவான நட்பிற்கு அதிகம் எல்லைகளை விதிக்காதவன். மனதளவு நட்பிற்கு சில விதிமுறைகளை வைத்திருக்கிறேன்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

ஏதோ ஒரு சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியர் சொன்னதினால் என் பெற்றோர் என்னை தண்ணீர் ஆழமுள்ள, அபாயமுள்ள எந்த இடத்திற்கும் அனுமதித்ததில்லை. இருப்பினும் வாலிபம் வந்த பிறகு அருவியிலும் கடலிலும் குளித்திருக்கிறேன் பாதுகாப்பான இடத்திலிருந்து. உண்மையில் இரண்டுமே எனக்குப் பிடித்தவையல்ல... மெல்ல ஓடும் கழுத்தளவுத் தண்ணீரில் குளிப்பதே சுகமெனக்கு

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

முகம், மற்றும் உடை. அதிக ஆடம்பரமும் பகட்டும் இல்லாது இருப்பின் நம்பிக்கையோடு பேசுவேன்.

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

அவசியமான இடத்தில் உடனே மன்னிப்புக் கேட்பது, உதவுவது, நேர்மை எனக்கு என்னிடத்தில் பிடித்தவை. பிடிக்காதவையென இவற்றைச் சொல்லலாம் : என்னிடத்தில் பேச்சுத் தோழமையிலிருந்து மனசுத் தோழமைக்குக் குடிபெயர்தலின் பொழுது நான் அவர்களுக்கு விளைவிக்கும் பிரச்சினைகள், சில நேரம் என்னையறிந்தும், பல நேரம் என்னை அறியாமலும். என்னைப் புரிந்துகொண்டோர்கள், நம்பியவர்கள் இதன்பின்னும் நிலைத்திருப்பார்கள்! மற்றும், முக்கியமல்லாத அல்லது உணர்வு சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு அவ்வப்பொழுது இருக்கும் மனநிலையின் பதிலையே கூறுவது, முடிவான பதிலாக அல்லாமல்...

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விசயங்கள் என்ன?

என் பாதி என் தோழர்கள், அவர்களிடம் பிடிக்காததேயில்லை, அவர்கள் திருத்திக் கொண்டால் இன்னும் பிடித்தமாவார்களென்ற ஒரு சில விசயங்களைத் தவிர. குடும்பத்திற்கும்(ஒருவேளை திருமணம் புரிந்தால் மனைவிக்கும்) நான் பாதியைக் கொடுக்கவில்லை, என்னை முழுதுமே கொடுத்திருக்கிறேன்.

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

தோழர்கள், மற்றும் பெற்றோர். பெற்றோரைப் பிரிந்து 8 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தும் இன்னமும் அவர்களுக்குப் பிடித்தவனாய் நானிருப்பதற்குக் காரணம் என் தோழர்களே! நட்சத்திரம் பெரிதெனினும், நிலவின் வெளிச்சத்திலேயே 8 வருடங்கள் கழிப்பதால் நிலவு பெரிதெனப் படுகிறது. இவர்களைப் பிரிந்து தற்பொழுது தற்காலிகமாக ஜப்பானிலிருக்கும் நாட்கள் நரக நாட்களே!

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

கருநீல கைலி, வீட்டில் இருக்கும் போது மேல் சட்டை அநேகமாக அணிவதில்லை.

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

நிலாவே வா - மௌனராகம். எதற்காகவோ அந்தப் பாட்டிலுள்ள வலி என்னை ஆக்கிரமித்திருக்கிறது தற்பொழுதெல்லாம்...

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

வான் நீலம் மட்டும். நானாக விட்டு விலக எண்ணியும் என்னையே நாடி வந்து கொண்டிருப்பதால், விலக்கப்படாத அங்கீகாரம் அளித்திருக்கிறேன் அதற்கு.

14. பிடித்த மணம்?

மழைப் பொழுதின் மண்வாசனை, மழைநேரத்து தேநீர் வாசனை, சாணம் தெளித்த கிராமத்து பூர்வீக வீட்டு வாசனை.

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

கோகுலன் - என் இணைய தோழன். பகிர்ந்துகொண்ட சொற்கள் சொச்சமே எனினும் அவனுக்கும் எனக்கும் ஒரு சின்ன புரிதல் இருக்கிறது. அவனது கவிதைகள் எனக்குப் பிடித்தம், சிறுகதை மிகப் பிடித்தம்.

சஹாராதென்றல் - என் இணைய தோழி. இதுவரை மின்மடல், மின்னரட்டையென எதிலும் பேசிராவிட்டாலும், அவளது புனைவுக் குறிப்புகளின் சுவைஞன் நான். குறிப்பெழுதுதல், கவிதை வரைதல் இரண்டிலும் கெட்டிக்காரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சமீபத்தில் வெளியான விருட்ச துரோகம். ஒவ்வொரு முறையும் இது மாறிக் கொண்டே இருக்கிறது புதிய படைப்புகள் வரும்பொழுது!!!

17. பிடித்த விளையாட்டு?

மைதானத்தில் பூப்பந்து, வீட்டிற்குள் விளையாட்டு விளையாடுவதில்லை, தோழர்களுடனான பேச்சு விளையாட்டு மட்டுமே.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம், 7ம் வகுப்பிலிருந்து.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பணத்தைக் கொட்டி எடுக்கும் அர்த்தமுள்ள திரைப்படத்தின் அழகு (டைட்டானிக், டிராய், ...), ஆடம்பரமற்ற அருமையான கதை, திரைக்கதை (அன்பே சிவம், மௌனராகம், காதல் கொண்டேன்,...) அமைந்த கதை எதுவாயினும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

தமிழில் கடைசியாகப் பார்த்தது மறுபடியும் ஒருமுறை "அன்பே சிவம்". ஆங்கிலத்தில் கடைசியாகப் பார்த்தது மறுபடியும் ஒருமுறை "காஸ்ட் அவே" (cast away), என் தனிமைக்கு மருந்தாய் அந்த கதாநாயகனின் தனிமை!

21. பிடித்த பருவகாலம் எது?

மெல்லிய தூறல் பெய்யும் காலமெதுவாயினும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

மீண்டுமொரு முறை கவிக்கோ அப்துல் ரஹ்மானின் "பால்வீதி"

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

மாற்றாக எனைக் கவர்ந்த ஏதாவது கிடைக்கும் பொழுது, ஆயினும் அடிக்கடி மாற்றுவதில்லை.

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

மௌனம், மற்றும் மௌனம் இதனின் மெல்லிய உணர்வுச் சத்தம், சந்தர்ப்பங்களைப் பொறுத்து.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

டோக்கியோ, இந்தியாவிலிருந்து 9 மணி நேர விமானப் பயணம்.

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

கவிதை, ஓவியம், இதில் சிறுகதை சேர்ந்து கொள்ளும் முயற்சியில்...

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்?

நீண்ட நேர விளக்கத்திற்குப் பிறகும் எனக்கு விருப்பமானவர்கள் என்னைப் புரிந்து கொள்ளாத விசயங்கள் மற்றும் நம்பிக்கைத் துரோகம்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

கொஞ்சம் முன்கோபம், கொஞ்சம் அவசரம்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

மொட்டை மாடி அதிகாலை, அந்தி, இரவு வேளைகளில்.

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

என்னைப் புரிந்து கொண்டவர்களை மட்டுமே கொண்ட சூழலில் சில சின்ன ஊடல்களோடும், பிறகு வரும் கூடல்களோடும் வாழ ஆசை.

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

இப்பொழுது செய்யும் எல்லாமேதான், ஏனெனில் எனக்கு இப்பொழுதுவரை மனைவி, காதலி இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

ஒரேயொரு முறை வாழக் கிடைத்த வாய்ப்பில் பிறரிடம் அன்பு மட்டுமே செலுத்த வேண்டிய செல்லப் பயணம்!



தனிமையின்
பேய்க்கரங்களால்
என்னைச் சூழ்ந்திருந்த
வெய்யிலில்
தவிர்க்க முடியாத
காரணங்களுக்கு
அடிமையானவனாய்
உனது கோரிக்கைகளை
நிராகரிக்கும் கோடாரிகளாக
எனது சொற்களுக்கு
வலுவூட்டிக்
கொண்டிருந்தேன்
நாம் நடந்த
ஒரு சாலையில்
நடந்து செல்லும்போது
அகலப்படுத்துதலின்
பெயரில் மரங்கள்
அகற்றப்பட்டிருந்தன
சாலைக்குப்
புரிந்திருக்கும்
என்
விலகுதலின் வலி.




தமிழ் ஆத்தர்ஸில் வெளியிட்டதற்கு நன்றி



அர்த்தங்களின்றிக் கழியும்
அந்தி நேரங்களில்
ஒரு சூனியக்காரியின்
மர பொம்மையாய்
மாறியது மனது
ஏக்கங்கள் தசைகளில்
ஏறி அதை
இறுக்கி இறுக்கி
மேலும் உணர்வுகளைப்
பலப்படுத்தியது
இரணம் இரணமாய்
வழிந்து செல்லும்
உணர்ச்சிக் கோடுகளின்
வழியே மீதமிருந்த
வெட்கமெல்லாம்
கரைந்து அழிய
தனிமையில் ஒதுங்கிய
மானின் முதல்
அலட்சியத்திற்காக
ஊடுறுவும் ஓநாயின்
கண்களோடு தசைகளைத்
துளையிட்டுத் திறக்கும்
காமம்
மழை முடிந்த பின்னும்
வழிந்து முடியாத
இலையின் தூறலாய்
அவள் கடந்த பின்னும்
தொடரும் கண்கள்.


கீற்றில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.keetru.com/literature/poems/oliyavan.php

கூடு பிரித்து வெளியேறுகிறாய்



ஒரு
வசந்தகாலத்தில்
அழைப்புகள்
ஏதுமின்றி
எனது எண்ணக்
கிளைகளின்
காதல் இலைகளினூடே
கூடுகட்டி வசித்தாய்
உன் கூட்டிற்கு
என்னிடமிருந்தே
சுள்ளிகள் கொடுத்தேன்
நான் இலைகளற்று
வெறுமையில்
தவிக்கிறேன்
இலையுதிர்காலத்தில்
இப்பொழுது ஏனோ
பிரிந்து செல்கிறாய்


ஒருமுனைக் காதல்


எனக்குள்
நிறைந்து வழியும்
உன்னை
கண்ணில் ஊற்றியவளாய்
புன்னகைத்தேன்.


என்னைப்
பற்றிய எவ்வித
பிரக்ஞையுமின்றி
கண்களைத் திருப்பிக்கொண்டாய்
உடைந்து விழுந்தது
ஏற்றுக்கொள்ளப் படாத
என்னிதயத் துண்டுகள்
நமக்கு நடுவிலே.


கொடுப்பதுமின்றி
எடுப்பதுமின்றி
புரிதலில் ஊறிய
பேச்சுக்கள்
உனக்குமெனக்குமான
உள்ள வாசல்கள்.

தொடுகையின் நேரத்தில்
சலனமற்ற உனது விரல்கள்
வசந்த காலப் பொழுதின்
புதிய தளிர்களாய்
என்னுள்.

உன் வேர்கள்
உனக்கான இடத்திலேயே
இருப்பதும் உன்
இலைகள் எனக்கான
இடத்தில் நிழல்
தருவதுமே நட்பின் சாட்சி.

நாளை துவங்கும்
எனது நெடுந்தூரப்
பயணத்தில் நமது
பிரிவைக் கடக்கவல்ல
துடுப்பைப் பரிமாறிச்
சென்று கொண்டிருக்கிறாய்
'எனக்கெதிரான திசையில்!'

வார்ப்பில் வெளியிட்டமைக்கு நன்றி




1.
யாருமற்ற தனிமையில்
விடுபடாது இருந்தது
உன் நினைவு.


உனது கடந்தகால
நினைவுகள்
எனது நிகழ்காலத்தை
உறிஞ்சிக் கொண்டிருந்தது.


சூல் கொண்ட
பூவாய் நான்!
தேன் குடித்து விட்டுப்
பறந்த வண்டாய் நீ!


2.
என் ஏகாந்த
தனிமையில் சுழல்கின்ற
நொடி'முள்ளாய்' நீ.


என் இரவிற்கு
வெள்ளையடித்துவிட்டு
போனது உனது வார்த்தை
மின்னல்கள்.


மின்னல் கிழித்துப்போன
மேக ஓட்டையில்
கண்ணீர் கசிகிறது
மாமழையாய்.


3.
கல்லறை தூரமானது,
கருவறையில்
உன் பிரதி.


துரோகச் சிலுவையில்
என்னை அறைந்துவிட்டு
மூன்றாம் மாதம்
உயிர்த்தெழுந்திருக்கிறாய்.


முற்றுப் புள்ளி
எட்டாத எனக்கு
கேள்விக்குறியாய் உன்
நினைவு முட்கள்.

அதிகாலையில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14131&lang=ta&Itemid=164


சொத சொதவென
இரத்தச் சகதியில்
நீ
இறுதி மூச்சை
இறுக்கிப் பிடித்தபடி
போகிறாய்.

உன்னைக் கரைசேர்க்கவல்ல
உதவிக் கரங்கள்
உலக சந்தையில்
விற்பனையாகிவிட்டன.

உன்னைப்
பின் தொடர்கிறது
பிணந்தின்னிக் கழுகு.

உன்
மரணச் செய்தி
பணம் காய்க்கும்
வித்தை அவர்களுக்கு.

நீ
நிம்மதியாக உறங்கு
உன்
மரணமும்
உதவுகிறது.

சொச்ச தூரத்தில் ஒரு
சொர்க்கம்,
மொட்டை மாடி.


நாகரீகங்களும்,
வளர்ந்த கட்டிடங்களும்
அர்த்தமற்றுப் போகும் இடம்.


வான் கடல்
இறைத்து விட்டுப் போன
கிளிஞ்சல்களாய் மேகங்கள்,
அவற்றில் வண்ணம் தூவி
ஹோலி கொண்டாடும்
அந்தி நேரச் சூரியன்,
இந்தப் பரவசத்தில்
நாளும் புல்லரித்துப்போகும்
பூமியின் ரோமங்களாய்
மரங்கள்,
திசையெங்கும் அளந்து முடித்து
கூடு திரும்பும் பறவைகள்,
ஆடைக்குள் புகுந்து
அக்குளில் கூச்சம்
காட்டும் பிஞ்சு விரல்களாய்
அந்திநேரத் தென்றல்,
இத்தோடு சேர்ந்து கொண்டு
சத்தம் என்னும்
சட்டை கழற்றி எறிந்து
மௌனம் உடுத்தி
அம்மணமானது ஒலி.


அந்த நிசப்த
நேரத்தில் போதி மரங்களை
தேடியலையும் எண்ணங்கள்,
பாவ மன்னிப்புக்காக
பாதரியாரைத் தேடியலையும்
பாவ சிந்தனைகள்.


வண்ணம் தூவி
விளையாடி முடித்த
கதிரவன் வீடு திரும்ப,
இருட்டுக் கம்பளத்தைப்
போர்த்திக் கொள்ளும்
வானம்.


இருண்ட பிறகு
திண்ணைப் பேச்சுக்குக்
கூடும் கிராமத்துக்
கன்னிப் பெண்களாய்
விண்மீன்கள் கூட்டமிடும்.


இதில் லயித்துக் கொண்டே
எண்ணக் கால்கள்
தரையை விடுத்து
தாவியெழும் விண்ணுக்கு....


கானம் பாடத் தெரிந்து
கூடு கட்டத் தெரியாத
குயிலாய் மாறத் தூண்டும்
ஆசையைத் துறக்கச்
சொல்லும் ஓர்
அந்தரங்க நரம்பு,
அந்த எண்ணங்களின்
கால்களை தரைக்கும்
இழுத்து வரும் இயலாமை
சுட்டிக் காட்டும்,
நான்
இறக்கை இல்லாத
கிவி பறவையென்று.

உன் பாதைகள் நோக்கியே
என் பாதங்கள் செல்வதை
நிறுத்தமுடியாமல் திரும்புகிறேன்.

உன் பேச்சுக்களைக் கேட்கவே
என் காதுகள் கூர்மையாவதை
தவிர்க்கமுடியாமல் தோற்கிறேன்.

நம் முகம் இரண்டும்
நேரே பார்க்க மறுத்தாலும்
புன்னகைத்துக் கொள்வது உண்மை.

நீயும் நானும் மகிழ்ந்து குலாவியதை
நியாபக அடுக்குகளில் தேடி
அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் கூட்டை வந்தடையும்
மென்மையான பொழுதுக்காக
அடிவாரமிட்டிருக்கிறது நம் ஊடல்.

நிலாச்சாரலில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.nilacharal.com/ocms/log/11100806.asp